அலகாபாத்:
உத்தரப் பிரதேசத்தில் தேசியப் பாதுகாப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக, 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஆளும் பாஜக அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருப் பதை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
‘ஹேபியஸ் கார்பஸ்’ எனப்படும் ஆட் கொணர்வு வழக்குகளில் 30 சதவிகிதம், அதாவது 41 வழக்குகள்- பசுவை வதைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட் டோருக்கான வழக்குகள் என்ற நிலையில்,அவற்றில் 30 வழக்குகளில் உ.பி. அரசின் செயல்பாடுகளை அலகாபாத் உயர் நீதிமன்றம் விமர்சித்து இருப்பதாகவும், 32 மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்திருந்த 94 பேர் மீதான சிறைக்காவலை அதிரடியாக ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2017-ஆம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் பாஜக அரசு பதவிக்கு வந்தது. சாமியார் ஆதித்யநாத் முதல்வர் ஆனார். அப்போதுமுதல், அம்மாநிலத்திலுள்ள தலித்துக்கள்,சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் வேகம் எடுக்கத் துவங்கின. குறிப்பாக, இஸ்லாமியர்கள் பொய் வழக்குகளில் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். பலர் மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்று கூறி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில்கைது செய்யப்பட்டனர். முத்தலாக் தடுப்புச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், லவ்ஜிகாத் தடுப்புச் சட்டம் என பல்வேறு சட்டங்களின் பெயரால்- போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டனர்.
இந்நிலையில்தான், கடந்த 2018 ஜனவரிமுதல் 2020 டிசம்பருக்கு இடையே, ஆதித்யநாத் அரசால் போடப்பட்ட பல்வேறு வழக்குகளில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்ததீர்ப்புகளை ஆராய்ந்து - அந்த தீர்ப்புகளில் ஆதித்யநாத் அரசு எந்தளவிற்கு நீதிமன்றத்தில் கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டுள்ளது.2018 ஜனவரி முதல் 2020 டிசம்பருக்கு இடையே, தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் 120 ஹேபியஸ் கார்பஸ் மனுக்களை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்புவழங்கியுள்ளதாகவும், அதில், ஆதித்யநாத் அரசின் சட்ட விரோதக் கைதுகளை சாடியிருப்பதாகவும் அந்த ஏடு தெரிவித்துள்ளது.குறிப்பாக 94 வழக்குகளில் தடுப்புக்காவல்களையும், 32 மாவட்ட ஆட்சியர் களின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவையும் ரத்துசெய்து, சிறைவாசிகளை விடுதலை செய்துள்ளதாக கூறியுள்ளது.பசுவதையில் ஈடுபட்டதாக மோடி அரசால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தேசிய பாதுகாப்புச் சட்டத்தைஅமல்படுத்த மாவட்ட ஆட்சியர் பிறப் பித்த உத்தரவுகளை உன்னிப்பாக ஆராய்ந்தால், 11 தடுப்புக் காவல்களில்,அவர் ‘மனச்சாட்சியைப் பயன்படுத்தவில்லை.’ 13 தடுப்புக் காவல்களில், சம்பந்தப்பட்டவர்கள் தேசியப் பாதுகாப்புச்சட்டத்திற்கான தங்களின் தரப்பை எடுத்துரைக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 7 தடுப்புக் காவல்கள் முழுக்க முழுக்க சட்டம் - ஒழுங்கு வரம்பிற்குள் வர வேண்டியவை. ஆனால், அவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டில்சேர்க்கப்பட்டுள்ளது. இது அவசியமில்லை என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் வெவ்வேறு வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளதை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ படம் பிடித்துள்ளது.